தஞ்சாவூரில் மராட்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தூக்கு மேடையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் சேவப்பநாயக்கன் ஏரி மேல்கரையில் 200 ஆண்டுகள் பழமையான தூக்குமேடை உள்ளது. தரையிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் கலவை கட்டுமானத்தை கொண்டுள்ளது. 30 அடி அகலத்திலும் 200 அடி நீளத்திலும் கட்டப்பட்ட இந்த தூக்குமேடை தற்போது மேற்கூரை ஏதும் இல்லாமல் வெறும் கட்டிடம் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்நிலையில் சிலர் இதை இடித்துவிட்டு, இந்த இடத்தை விற்க போவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியினர் திரண்டு கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பினர். மராட்டிய மன்னர் காலத்தில் கொடுமையான குற்றங்களை செய்தவர்களை தூக்கு மேடையில் ஏற்றி கொல்லும் வழக்கம் இருந்துள்ளது. தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்கள் இந்த தூக்கு மேடையை பயன்படுத்தியுள்ளனர்.
காலப்போக்கில் இந்த தூக்கு மேடையை பயன்படுத்தாமல் இருந்ததால் தற்போது கட்டுமானம் மட்டும் எஞ்சியுள்ளது. இந்த தூக்கு மேடையை யாரும் ஆக்கிரமிக்காதவாறு அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சிலர் இதனை எங்களுக்குரியது எனக்கூறி இடித்து அகற்ற முயற்சி செய்து வருகின்றனர். மேலும், இந்த இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, எஞ்சியுள்ள கட்டுமானத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.