தஞ்சை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை – கடல் நீர்மட்டம் உயர்வு... அச்சத்தில் மல்லிப்பட்டினம் மீனவர்கள்
செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீன்பிடித் தளத்தில் சுமார் 300 படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து தங்களது வாழ்வாரத்தை காத்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து இந்த பகுதியில் பெய்து வரும் கன மழையால் கடந்த 22 ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கஜா புயல் ஏற்படுத்திய கோரத்தாண்டவத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள், தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். இதையடுத்து தற்போது பெய்து வரும் கனமழையும் உருவாகியுள்ள புயலும் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலின் நீர்மட்டம் வழக்கத்தை விட நான்கு முதல் ஐந்து அடி வரை உயர்ந்துள்ளதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுமோ என்ற அச்சமும் அந்த பகுதி மீன மக்களுக்கு எழுந்துள்ளது. அதே வேளையில் மாவட்ட நிர்வாகமும் வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த பகுதிகளில் தீவிரப்படுத்தி உள்ளனர்.