உதவித்தொகை பெற்றார் தஞ்சாவூர் மிட்டாய் தாத்தா!
தஞ்சாவூரில் குழந்தைகளுக்கு மிட்டாய் செய்து விற்பனை செய்து வரும் மிட்டாய் தாத்தாவுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது
1956ம் ஆண்டு பர்மாவில் போர் நடந்தது. அப்போது தன் குடும்பத்தை போரில் இழந்த முகமது அபுசாலி தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தார். அதற்கு பின் டீக்கடைகளில் வேலைபார்த்த அவர், பின்னர் நண்பர்கள் உதவியுடன் மிட்டாய் செய்யும் தொழில் செய்யத் தொடங்கினார். தற்போது 113 வயதாகும் முகமது அபுசாலி தஞ்சை கீழவாசல் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இன்னமும் தனி ஆளாக மிட்டாய்களை தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார்
காலையில் எழுந்து இஞ்சி மிட்டாய், குளுக்கோஸ் மிட்டாய், தேங்காய் மிட்டாய் என பல வகையான மிட்டாய்களை தனி ஆளாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார் முகமது அபுசாலி. அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அவர் மிட்டாய் தாத்தாவாகவே மாறிவிட்டார்.
தான் பர்மாவில் இருந்து வந்ததால் தனக்கு அரசின் உதவித்தொகை கிடைக்கவில்லை என ஊடகங்களிடம் வருத்தம் தெரிவித்திருந்தார் மிட்டாய் தாத்தா. இந்நிலையில் ஊடகங்கள் மூலம் செய்தியறிந்த தஞ்சாவூர் வட்டாட்சியர் மிட்டாய் தாத்தாவை தொடர்புகொண்டு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் உதவித்தொகையையும் வழங்கினார்.