தமிழகத்தில் நீண்ட நாட்களாகவே இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடந்துவருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைத்து துறை சார்ந்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் டி-சர்ட்டுகளில் புதுப்புது வாசகங்களை பிரிண்ட் செய்து அணிந்து அந்த புகைப்படங்களை வெளியிடுவது டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் இந்திய அளவில் பிரபலமானது.
அந்த வரிசையில், சமீபத்தில் ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட் அணிந்தவாறு திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கும் புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வார இறுதி நாட்களில் ஈசிஆர் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்தவகையில் கடந்த வாரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும்போது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்களுடன் ’தமிழ் எங்கள் உயிர்’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட டி- சர்ட்டை அணிந்து சென்றார். இதில் தமிழ் என்ற வார்த்தை தமிழிலும், எங்கள் உயிர் என்ற வார்த்தைகள் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கையை வலியுறுத்தும் வகையில் அவர் இந்த டி-சர்ட்டை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.