தீபாவளி திருநாளையொட்டி விநோத சாணியடி திருவிழா

தீபாவளி திருநாளையொட்டி விநோத சாணியடி திருவிழா
தீபாவளி திருநாளையொட்டி விநோத சாணியடி திருவிழா

ஈரோடு மாவட்டம் தாளவாடி குமிட்டாபுரம் பீரேஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணத்தை வீசியெறிந்து விநோத நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் தமிழகம், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  

தாளவாடி அருகே உள்ள குமிட்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் மூன்றாவது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

ஊர்தெய்வமான பீரேஸ்வரருக்கு இன்று சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்கள் வெற்றுடம்புடன் கோயிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.  அங்கு கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டையாக வடிவமைத்தனர். இதில் பங்கேற்ற பக்தர்கள், ஒருவருக்கொருவர் மீது சாணத்தை வீசி மகிழ்ந்தனர். இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை பெண்கள், ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சிக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர்.

இந்த விநோத விழா குறித்த தகவல்கள்:  சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்துச்சென்று சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்துவிட்டார். இவ்வூரைச் சேர்ந்த மாட்டு வண்டி ஒன்று குப்பைமேட்டின் மீதேறிச் செல்லும்போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. உடனே இதைக்கண்ட மக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது. அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்து மூன்றாவது நாள் சாணத்திலிருந்து தான் மீண்டெழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கூறியதாகவும் இதையடுத்து மூதாதையர் வழிகாட்டுதல் படி இந்த விழாவை கொண்டாடி வருவதாக  கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com