கைதான 3-வது நாளில் மரணம்; 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராடும் தாய் - நடந்தது என்ன?

சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை தேவை என்றும் 5 நாட்கள் கடந்தும் உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
புளியங்குடி-தங்கச்சாமி
புளியங்குடி-தங்கச்சாமிPT

கைது செய்த 3ஆவது நாளில் மரணம்!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழில் பார்த்து வரும் 26 வயதான இளைஞர் தங்கச்சாமி என்பவர் கடந்த ஜூன்11ம் தேதி சட்ட விரோத மது விற்பனை செய்ததாக புளியங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமிக்கு 14-ம் தேதி உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாக கூறி, அவரை மருத்துவமனை அழைத்துச்சென்றனர் காவலர்கள். இந்நிலையில் சிறைச்சாலையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

புளியங்குடி-தங்கச்சாமி
புளியங்குடி-தங்கச்சாமிPT

இது குறித்து காவல்துறை தரப்பிலிருந்து குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கும் போது, தங்கச்சாமி வலிப்பு நோயால் இறந்ததாக முதலில் கூறியுள்ளனர். அதன் பின்னர் மாரடைப்பு மரணம் என்றுள்ளனர். இப்படி மாறி மாறி தெரிவிக்கப்பட்டதால் அவரது உறவினர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் அன்றைய தினமே ஈடுபட்டனர். 4 நாட்களை கடந்து தொடரும் இவர்களின் போராட்டம் 5வது நாளான நேற்றும் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து வந்தது.

சந்தேகத்தை கிளப்பும் உடற்கூறாய்வு அறிக்கை!

இந்த நிலையில்தான் உடற்கூறாய்வு அறிக்கை வெளியானது. அதில் இறந்த தங்கச்சாமி உடலில் சுமார் 7 இடங்களில் காயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த காயங்கள் கடந்த 3, 4 நாளில் ஏற்பட்டதாக இருக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் தரப்பில், காவல்துறையினர் அல்லது சிறைத்துறையினர் தாக்கி தங்கச்சாமி இறந்தாரோ என தங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாக கூறினர்.

புளியங்குடி-தங்கச்சாமி
புளியங்குடி-தங்கச்சாமிPT

சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் போது “காவல்துறையின் தவறான அனுகுமுறையால் தான் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. அவரது இறப்பில் அதிகமான சந்தேகம் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

“போலீசார் தாக்கியதால் தான் இறந்துள்ளார்!” கதறி அழுத தாயார்!

இதுகுறித்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் கூறும் போது, “பைக் எடுக்க சென்றவரை அடித்து துன்புறுத்தி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்வியை எழுப்பி, எங்களுக்கு எந்த தகவலும் தரவில்லை எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் காவல்துறையினர் தங்கச்சாமி இறந்த தகவலை நேரடியாக தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும், நாட்டாமை மூலமாக தான் தெரிவித்தனர் என்றும் கூறுகின்றனர்.

புளியங்குடி-தங்கச்சாமி
புளியங்குடி-தங்கச்சாமிPT

“போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்துள்ளார். முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது? விளக்கம் அளித்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் அளித்த தகவலில், “அவர் உடலில் பழைய காயங்கள் இருந்திருக்கலாம். காவல் நிலையத்தில் காயம் ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லை. காவல் நிலைய விசாரணைக்கும் காயத்திற்கு சம்பந்தமில்லை. உடற்கூறாய்வில் அவர் மாரடைப்பால் மரணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. காயங்கள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “உறவினர்கள் தகவல் தெரிவித்த அன்றே சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போதே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் காவல்துறையினர் தெரிவிக்க வேண்டிய முழு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயங்களை பொறுத்தவரை, அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்கு பின்னரே மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த மருத்துவ பரிசோதனையில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் உடற்கூறாய்வு அறிக்கையில் காயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பது இந்த மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையே. இதனை வைத்து நாங்கள் ஒன்றும் கூற இயலாது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com