தென்காசி | சிறுமிக்கு பாலியல் தொல்லை – நீதிமன்ற உத்தரவை அடுத்து பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
செய்தியாளர்: இ.முத்துப்பாண்டியன்
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன் (58). பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர், தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் தனக்கு நேர்ந்த கொடுமையை தைரியமாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், தென்காசி மாவட்ட கண்காணிப்பாளரிடம் சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். அதன்பின்னரும் வழக்குப்பதிவு செய்யப்படாததால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் நீலகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.