தேஜஸ் விரைவு ரயிலில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்... தொடங்கி வைத்த இணையமைச்சர் எல்.முருகன்!

தேஜஸ் விரைவு ரயிலில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்... தொடங்கி வைத்த இணையமைச்சர் எல்.முருகன்!
தேஜஸ் விரைவு ரயிலில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்... தொடங்கி வைத்த இணையமைச்சர் எல்.முருகன்!

தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லவேண்டும் என்ற பலநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மத்தியமைச்சர் எல்.முருகன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு தேஜஸ் விரைவு ரயிலானது, சென்னை எழும்பூர்- மதுரைக்கு இடையே தொடங்கப்பட்டது. இந்நிலையில் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த ரயிலானது சென்னை புறநகர் வழியாகச் சென்று திருச்சி சந்திப்பில் மட்டுமே நின்று செல்லும் விதமாக இயக்கப்பட்டது. இதனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நிகராக கருதப்படும் தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லவேண்டும் என்ற கோரிக்கையை, தொடர்ந்து பயணிகள் வைத்துகொண்டே வந்தனர். தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் அதிகளவில் உள்ளபோதிலும், அவர்களின் இந்த கோரிக்கை நீண்டநாட்களாகவே நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தேஜஸ் விரைவு ரயிலானது, தாம்பரம் சந்திப்பில் நின்று செல்ல வேண்டும் என்று வைக்கப்பட்டுவந்த கோரிக்கை தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். அதை ஏற்று மத்திய ரயில்வே துறை, இன்று முதல் தேஜஸ் அதிவிரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிக்கை வெளியிட்டது. பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய இந்த அறிவிப்பை வரவேற்ற ரயில் பயணிகள், தேஜஸ் விரைவு ரயில் இன்று முதல் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டதால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் சென்னை புறநகர் வழியாக திருச்சி சந்திப்புக்கு 10.15 மணி அளவில் சென்று, அங்கிருந்து மதுரைக்கு மதியம் 12.15 மணியளவில் சென்றடைகிறது. பின்னர் மாலை 3 மணிஅளவில் மதுரையில் இருந்து புறப்படும் தேஜஸ் அதிவிரைவு ரயில், சரியாக 9.15-மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது.

இன்று முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் விரைவு ரயிலை, முதல் நாளான இன்று, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சர் எல்.முருகன், டி.ஆர் பாலு, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்ஆர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தேஜஸ் விரைவு ரயிலானது, வாரத்தில் சுழற்சி முறையாக ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும், வியாழக்கிழமை அன்று மட்டுமே இயங்காது எனவும் தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com