இளைஞர் கட்டையால் தாக்கி கொலை - டிக் டாக் வீடியோவால் நேர்ந்த விபரீதம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிக் டாக் வீடியோ காரணமாக இளைஞர் ஒருவர் தன் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாழவேடு கிராமத்தை சேர்ந்த விஜய், வெங்கட்ராமன் ஆகிய இருவரும் நண்பர்கள். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்களை வெங்கட்ராமன் இழிவாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது.
வீடியோவை பார்த்த மக்கள், வெங்கட்ராமனை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வெங்கட்ராமன், விஜய் ஆகிய இருவரும் தலைமறைவாயினர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வெங்கட்ராமனின் தந்தை கன்னியப்பனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கட்ராமன் மது அருந்தி கொண்டிருந்தபோது விஜய்யை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது.
விஜய் இறந்ததை உறுதி செய்ததும் வெங்கட்ராமன் திருத்தணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி காவல்துறையினர் வெங்கட்ராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.