வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
ஜக்டோ-ஜியோ போராட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக தொடக்க கல்வி இயக்குநர் சார்பில் இன்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை என்ற அடிப்படையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான ஊதியத் தொகை ஆசிரியர்களுக்கு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 43,508 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும், 6 சங்கங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதாகவும், ஆண்டு பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஆசிரியர்களின் ஊதியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. தமிழக அரசின் பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஊதியம் குறித்து நாளை விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து நாளை தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கத்தை பொறுத்து, ஆசிரியர்கள் போராட்டம் குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்கும் என கருதப்படுகிறது.