பள்ளியிலேயே தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியரை தாக்கியோர் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 4 வருடங்களாக பள்ளி ஆசிரியராக புதன்சந்தையை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் அங்கன்வாடி மைய பொறுப்பாளராக பணியாற்றி வரும் ஜெயந்திக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இருவரும் பள்ளி வளாகத்திலேயே உள்ள கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மீண்டும் இருவரும் பள்ளி வளாகத்திலேயே தகாத உறவில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது.
இதனையறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியில் இருந்த ஆசிரியர் சரவணன் வகுப்பறைக்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆசிரியரை தாக்கிய கிராம மக்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.