சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி தண்ணீர் இன்றி செடிகள் காய்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கருவி, அல்லிவிளாகம், செம்பதனிருப்பு,சாவடி, சிங்கான்ஓடை,காழியப்பநல்லூர்,உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறு, குறு விவசாயிகள் மாற்று பயிராக. சுமார் 200 ஏக்கர் வரை மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். எட்டு மாத கால பயிரான மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு முக்கிய தேவை தண்ணீர். ஆனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறையாலும், போதிய மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கத்தாலும் இலைகள் காய்ந்து செடிகள் வளராமல் இருப்பதால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் முழுமையாக மகசூல் பாதிக்கபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஊரக பகுதியில் மும்முனை மின்சாரம் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை எனவும் இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செடிகள் நன்றாக வளர்ந்த நிலையிலும் கிழங்கு வளர்ச்சியடையாமல் சிறுத்து மகசூல் பாதிக்கபட்டுள்ளது எனவும் இப்படியே விட்டால் வெயிலின் தாக்கத்தால் முற்றிலும் காய்ந்து விடும் என்பதால் மரவள்ளி கிழங்கை அறுவடை செய்ய துவங்கிவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கிழங்குகள் போதிய வளர்ச்சி அடையாததாலும் கொரோனா ஊரடங்கால் சந்தைகள் மூடப்பட்டதாலும் அறுவடை செய்த கிழங்குகளை விற்பனை செய்ய முடியாமல் இப்பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் வேலை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுக்கவே சிரமப்படுவதாக வேதனை தெரிவித்த மரவள்ளி கிழங்கு விவசாயிகள் தங்களுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.