தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் மீண்டும் களைகட்டிய மொய் விருந்து! கோடிகள் குவியும் வசூல்

தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் மீண்டும் களைகட்டிய மொய் விருந்து! கோடிகள் குவியும் வசூல்

தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் மீண்டும் களைகட்டிய மொய் விருந்து! கோடிகள் குவியும் வசூல்
Published on

கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை கடந்து புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் கலாச்சாரம் சார்ந்த விழாவாக கருதப்படும் கோடிகள் குவியும் மொய் விருந்து விழாக்கள் ஆரம்பமாகியுள்ளன. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் களைகட்டத் தொடங்கியுள்ளது மொய் விருந்து. 

இந்த ஆண்டு காலம் கடந்து மொய் விருந்து விழாக்கள் தொடங்கியுள்ளதால் கடந்த ஆண்டுகளைப் போல மொய் வசூல் மற்றும் வர்த்தகம் நடைபெறுமா என்ற ஏக்கத்தோடு மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள் காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி கஜா புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு, கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பெரும் துயரம் இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் மொய் விருந்து விழாக்கள் மெல்ல மெல்ல சரிவை சந்தித்து வருவதாக வேதனையோடு தெரிவிக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்.

மொய் விருந்து கலாச்சாம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் தொடங்கப்பட்டது தான் இந்த மொய் விருந்து விழாக்கள்.

அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும் பரவி தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது.

ஒரு விழா தாரர் ஐந்து ஆண்டுக்கு மட்டுமே மொய்விருந்து விழாக்களை நடத்த வேண்டும் என்பது விதிமுறை என்பதால் ஐந்து ஆண்டு நிறைவடைந்த ஒவ்வொரு நபரும் தான் வாங்கிய தொகையை அந்த 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்திவிட்டு அதன் பின் மீண்டும் மொய் விருந்து வைப்பார்கள். அப்படி ஐந்தாவது ஆண்டில் விழா நடத்த வேண்டிய நபர்கள் விழா நடத்த முடியாமல் போனால் அவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள். அதனால்தான் ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் இந்த பகுதிகளில் மொய் விருந்து விழாக்கள் களைகட்டும்.

வழக்கமாக புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி-ஆடி -ஆவணி மாதம் நடைபெறும் மொய் விருந்து விழாக்கள், இந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்திய பாதிப்பாலும் தொடர் பொது முடக்கத்தாலும் 6 மாதங்களைக் கடந்து தற்போது மாசி மாதத்தில் களைகட்டத் தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் தற்போது தொடங்கியுள்ள மொய் விருந்து விழா அதனை சுற்றியுள்ள பகுதிகளான அணவயல், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, சேந்தன்குடி, குளமங்கலம் என தொடர்ந்து அடுத்தடுத்த ஊர்களிலும் அடுத்து வரும் பங்குனி மாதம் வரையில்  நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் 500 கோடி வரையில் மொய் பணம் வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று  ஏற்படுத்திய பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் வசூலாகும் மொய் தொகையின் விகிதாச்சாரம்  குறையும் என்று கூறுகின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்.

எனினும் தற்போது கொத்தமங்கலம் பகுதியில் மொய் விருந்து விழாக்கள் தொடங்கி உள்ளதால் வீடுகள் தோறும் மொய் விருந்து அழைப்பிதழ்கள் குவிய தொடங்கியுள்ளன. அதேபோல் அனைத்து ஊர்களிலும் மொய் விருந்து பேனர்கள் பளபளக்க தொடங்கிவிட்டன.

மொய் விருந்து விழாவிற்கு வருபவர்களை விழா நடத்துபவர்கள் அன்போடு மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டு கறி விருந்தும் பரிமாறி அசத்துகின்றனர்.

கலாச்சாரம் சார்ந்த விழாக்களுக்கு அரசும் தற்போது அனுமதி அளித்துள்ளதால் கடந்த ஆடி மாதத்தில் மொய் விருந்து வைக்க முடியாமல் போனவர்கள் அடுத்த ஆண்டு ஆடி மாதம் மொய் விருந்து நடத்த வேண்டிய விழா தாரர்களும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு மொய் விருந்து விழாக்களை நடத்தி வருகின்றனர்.

இந்த மொய் விருந்து விழாக்கள் மூலம் ஆடு வியாபாரிகள், மண்டபம், மளிகை கடை உரிமையாளர்கள், பத்திரிக்கை மற்றும் பிளக்ஸ் பேனர் அச்சக தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வாழை இலை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு நல்ல வருமானங்கள் கிடைப்பதோடு பல கோடி மதிப்பிலான வர்த்தகமும் நடைபெற தொடங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி மொய் எழுதுபவர்கள், சமையல் தொழில் ஈடுபட்டுள்ளோர், உணவு பரிமாறுபவர்கள் என பல ஆயிரம் பேருக்கு வரும் இரண்டு  மாதங்களில் தொடர்ந்து வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

இந்த மொய் விருந்து விழாக்களை 10 பேர் முதல் 32 பேர் வரை இணைந்து ஒரே விழாவாக நடத்துவதால் உணவு உள்ளிட்ட செலவுகளை அனைவரும் இணைந்து பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் மொய் விருந்து நடத்துபவர்களுக்கு செலவுத்தொகை குறைகிறது.

கடந்த காலங்களை போல் இந்த ஆண்டு இந்த ஆண்டு மொய் விருந்தில் தொகை கிடைக்காவிட்டாலும் 250 கோடி முதல் 400 கோடி வரையில் இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com