செப்.30 வரை மழை எச்சரிக்கை.. கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல், அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. நாளை (செப்.26) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 27ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 28ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.