36 வயது இளைஞர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி மற்றும் 2 வயது மகளுடன் ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வருவதாக புதியதலைமுறைக்கு செய்தி கிடைத்தது. அதனைத் தொடந்து அந்த நபரை தொடர்பு கொண்டு பேசினோம்...
“ஐயா என் பேரு செல்வம். 36 வயசாகுதுங்க, என் மனைவி பேரு நந்தினி., மாசமா இருக்காங்க. எனக்கு ஒரு மக இருக்கு வயசு 2, பேரு மதிவதனி., ஆந்திரால ஒரு பனியன் கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தேன். இந்த லாக்டவுன் அறிவிச்ச பிறகு கம்பெனிய மூடிட்டாங்க. பத்து பனிரெண்டு நாள் வரைக்கும் அங்கயே சமாளிச்சோம். அதுக்கு மேல முடியல., அதான் நடந்தே சொந்த ஊருக்கு போயிரலாம்னு கிளம்பிட்டோம்.” என்றவரிடம் மேலுல் சில தகவல்களைக் கேட்டோம்.
“சொந்த ஊரு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பக்கத்துல இருக்க வெள்ளாளபட்டிங்க., அப்பா அம்மாலாம் அங்க தான் இருக்காங்க., ஊர்ல விவசாயம் இல்லாம போச்சு அதனால நான் ஆந்திரால இருக்க ஆனந்தபூர்ல பஞ்சம் பிழைக்க போனோம். அங்க போயி ரெண்டு வருசம் ஆகுதுங்க.,” என்று சொன்னவர் “எங்கள எப்டியாவது ஊருக்கு கொண்டு போய் விட்ருங்க.,” என கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அரசு மற்றும் ஆனந்தப்பூர் மாவட்ட தூம்குண்டா வட்டார அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.