சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று அதிகாரிகளுடன் சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மாதாந்திர சீராய்வு கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. அதில், கடந்த நிதி ஆண்டில் துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் முழுமையாக முடிவுற்றள்ளதை உறுதி செய்யவும், தற்போதைய மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்கள் மட்டுமின்றி, மக்கள் அதிகம் கூடும் பிரச்னைக்குரிய கோவில்களில் கூட அறநிலையத்துறை தலையிடலாம் என சட்டத்தில் உரிமை உள்ளதால், அதில் அறநிலையத்துறை தலையிட்டு மக்களுக்கான தேவையை செய்து கொடுக்கும். மதுரை சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வெகுசிறப்பாக, சிறு குறைகூட இல்லாமல் அனைத்து வசதிகளுடன் நடத்தப்படும்.
அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் ஆன்மிக வகுப்பும் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மாணவர்களை ஆன்மிக சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல உள்ளோம். அதன் வரவேற்பை பொறுத்து திட்டம் விரிவுபடுத்தப்படும். ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற பணி நியமன ஆணயை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி கொடுத்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலைத்துறை, மேல்முறையீடு செய்துள்ளது” என தெரிவித்தார்.