`அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட...’- அமித்ஷா அறிக்கைக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்?

`அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட...’- அமித்ஷா அறிக்கைக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்?
`அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட...’- அமித்ஷா அறிக்கைக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்?

`தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது’ என மத்திய அரசை இந்த மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தோடர் மூலமாக தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் நிறைவடைந்த பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அரசுத்தரப்பு தகவலின்படி, பின்வருவன இன்றைய கூட்டத்தில் தீர்மானமாக வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்: “மத்திய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித் ஷா  தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அந்த அறிக்கை அளித்துள்ளதாக தெரிகிறது.

அப்படி அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருப்பவை: 

  • ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். 
  • இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில் நுட்ப மற்றும் தொழில் நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும். 
  • இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும்;

 உள்ளிட்ட பல இருக்கின்றன. 

இப்படி ஆங்கிலத்தை புறந்தள்ளி - அரசமைப்பு சட்டத்தின் அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 8-வது 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து - எதிர் காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான - நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை ஏற்கக் கூடாது மற்றும் நடைமுறைபடுத்தக் கூடாது என மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு 16.10.2022 அன்று தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் இந்த கடிதமானது, இந்த மாபெரும் அவையில் (தமிழ்நாடு சட்டப்பேரவை), முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராகவும், அப்போது பிரதமராக இருந்த நேரு அவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாகவும் உள்ளது. போலவே 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9.9.2022 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது”

முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தீர்மானத்தை நிறைவேற்றுவார் என சொல்லப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com