மத்திய அரசு அறிவித்த தளர்வுகளை தமிழக அரசு தொடர முடிவு?
பொதுமுடக்கத்தில் மத்திய அரசு அளித்த தளர்வுகளை தமிழக அரசு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில் சில தளர்வுகளும் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய மண்டலங்களில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகளை அப்படியே தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.