உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று பிரமாண்டமான முறையில் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். நிறைவு நாள் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளார். மொத்தமாக 2 நாட்கள் இந்த மாநாட்டில் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பில் முதலீடுகள் வரும் என அரசு எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மாநாட்டில் பங்கேற்க 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தொழிற் துறை பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதுதவிர, தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் தொழில் அமைப்பினரும் இம்மாநாட்டுக்கு திரளாக வந்துள்ளனர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அம்மாநாடு நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த மாநாடின் மூலம் வாகனம் மற்றும் மென்பொருள் துறைகளில் அதிகளவில் முதலீடுகள் வர வாய்ப்புள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் கூடுதலாக ரூ.7,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. டிவிஎஸ் லூகாஸ் ரூ.500 கோடி, பிரிட்டானியா ரூ.1000 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் அமெரிக்க நிறுவனம் ரூ.1000 கோடியில் காற்றாலை இறக்கைகள் தயாரிக்கும் திட்டம் வகுத்துள்ளது. நெய்வேலி என்எல்சி 3வது ஆலை விரிவாக்கத்திற்காக ரூ.1000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்தை விரிவாக்க அதானி குழுமம் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர், ஒசூரில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. மேலும் வாகனம், மென்பொருள், ஜவுளி ஆகிய துறைகளில் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.