
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சட்டப்பூர்வமான கோரிக்கையை ஏற்று, இந்த ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கி, சமூக வலைதளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!” என்று தனது ட்விட்டரில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.