காவிரி வாரியம்: முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
காவிரி நதிநீர் வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்எசி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவது, அதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைவதால் தமிழகமே மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்றைக்குள் அறிவிக்காத நிலையில், தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன், அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோரும் பங்கேற்றனர்.