தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமானால், தமிழகம் இனி கடவுளிடம் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திடீர் பல்டி அடித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்ஈ மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நளினி சிதம்பரம், "நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லாது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசே தெரிவித்துவிட்டதால், எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமானால், தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்" என்றார்.
ஓராண்டுக்கு விலக்கு அளிக்கு வகையில் தமிழக அரசு, அவசர சட்ட முன்வடிவு கொண்டுவருமானால் அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்தது தொடர்பாக கேட்டபோது, "அவர்களுக்கு சட்டம் தெரியவில்லை. அவசரச் சட்டம் வராது என்று ஏற்கனவே எனக்கு தெரியும். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க இனி வாய்ப்பே இல்லை. இந்தியா முழுவதும் இனி நீட் தேர்வுகள் அடிப்படையில்தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்" என்றார்.