விரைவுச் செய்திகள்: தளர்வுகளற்ற ஊரடங்கு | யாஸ் புயல் | +2 தேர்வு

விரைவுச் செய்திகள்: தளர்வுகளற்ற ஊரடங்கு | யாஸ் புயல் | +2 தேர்வு
விரைவுச் செய்திகள்: தளர்வுகளற்ற ஊரடங்கு | யாஸ் புயல் | +2 தேர்வு

1.தமிழகத்தில் நாளைமுதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமலாவதையொட்டி இன்று அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை திறக்கப்பட்டன. இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம அலைமோதியது. இதனால் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன. 

2. தமிழகத்தில் +2 தேர்வு நிச்சயம் நடத்தப்படும்: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் என மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிறகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

3. மாநில அளவில் நீட் தேர்வை நடத்திக்கொள்கிறோம்: நீட் தேர்வை மத்திய அரசு நடத்த தேவையில்லை. மாநில அளவில் நாங்களே நடத்திக் கொள்கிறோம் என மாநில கல்வி அமைச்சர்களின் கூட்டத்தில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

4. வாகனங்களில் வீடு தேடி வரும் காய்கறிகள்: நாளை முதல் ஒரு வாரத்திற்கு வீடுகளுக்கே சென்று காய்கறி விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விநியோகிக்க 4,380 நடமாடும் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

5. அதிர்ச்சி தந்த காய்கறிகள் விலை: நாளைமுதல் முழு ஊரடங்கு அமலாவதையொட்டி இன்று சென்னை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்ந்தது. 5 மடங்கு வரை விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

6. ஊரடங்கு கடுமையாக அமலாக்கம்: சென்னையில் முழு ஊரடங்கு கடுமையான முறையில் செயல்படுத்தப்படும் என மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. வாகனங்கள் 2ஆவது முறை பிடிபட்டால் நீதிமன்றத்திற்கு சென்றே திரும்ப பெற முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

7. டெல்லி, புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு: டெல்லி, புதுச்சேரியில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்ததும் ஊரடங்கு தளர்த்தப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

8. மீனவர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம்: தமிழகத்தில் மீன் பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

9. 'யாஸ்' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாவதையடுத்து 4 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com