விரைவுச் செய்திகள்: புதிய ஒப்பந்தங்கள் | ஒரேநேரத்தில். ஒரேஇடத்தில். இபிஎஸ், சசிகலா

விரைவுச் செய்திகள்: புதிய ஒப்பந்தங்கள் | ஒரேநேரத்தில். ஒரேஇடத்தில். இபிஎஸ், சசிகலா
விரைவுச் செய்திகள்: புதிய ஒப்பந்தங்கள் | ஒரேநேரத்தில். ஒரேஇடத்தில். இபிஎஸ், சசிகலா

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து - திட்டங்களுக்கு அடிக்கல்: 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட 35 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 21,630 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

நானே நேரடியாக கண்காணிப்பேன்: முதலீடு செய்யும் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்படுகிறதா என்பதை நேரடியாக கண்காணிப்பேன் என தொழில் அதிபர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

ஒரேநேரத்தில். ஒரேஇடத்தில். இபிஎஸ், சசிகலா: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை நலம் விசாரிக்க இபிஎஸ்சும், சசிகலாவும் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவசரஅவசரமாக மதுசூதனனை நலம் விசாரித்துவிட்டு அப்போலோவில் இருந்து உடனே வெளியே சென்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக கொடி கட்டிய காரில் வந்த சசிகலா: அதிமுக கொடி கட்டிய காரில் நலம் விசாரிக்க வந்தார் சசிகலா. கட்சியை வழிநடத்துவேன் என கூறியிருந்த நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

பெகாசஸ் - 2வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்: பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சையால் நாடாளுமன்றம் இரண்டாவது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேகதாது அணைக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு தெரிவித்தது. எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஆளுநர் மாளிகை முற்றுகை - காங்கிரஸ் அறிவிப்பு: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நாளை மறுநாள் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொழிற்படிப்பு - முதல்வரிடம் அறிக்கை அளிக்கிறது குழு: பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்கிறார் நீதியரசர் முருகேசன்.

தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர கோரிக்கை: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகை அடிப்படையில் தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தி இருக்கிறார்.

சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்த சதி?: சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குஷ்புவின் டிவிட்டர் கணக்கு ஹேக்: பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்புவின் டிவிட்டர் கணக்கை 'ஹேக்' செய்து பதிவுகள் அழிக்கப்பட்டதால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் குஷ்பு புகார் அளித்திருக்கிறார்.

ஓபிசி சான்று - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்: ஊதியம், வேளாண் வருவாய் கணக்கில் வராது: ஓபிசி சாதிச்சான்று வழங்கும்போது ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

ராஜகோபாலன் வழக்கு - போலீஸ் பதிலளிக்க உத்தரவு: ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. செவிவழி தகவலின் அடிப்படையில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக மனைவி தரப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிறுத்தம் - விவசாயிகள் கலக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வாரமாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் 3 லட்சம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்துவருகின்றனர்.

திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல்: திருச்சியிலிருந்து டெல்லி செல்ல முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்ததால், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குழந்தை விற்பனை - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்: மதுரையில் தனியார் அறக்கட்டளை குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. காவல் ஆய்வாளர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விளக்கமளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

மீண்டும் அவகாசம் கோரிய சசிகலா: அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற வழக்கை நிராகரிக்கக் கோரி எதிர்தரப்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சசிகலாவுக்கு அவகாசம் தேவை என்ற சசிகலா தரப்பு கோரிக்கையையடுத்து ஜூலை 30க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் - ரூ.3.44லட்சம் கோடி வரி வருவாய்: கடந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசுக்கு 3 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், பொதுமுடக்க காலத்தில் விற்பனை குறைந்தபோதிலும் வரி விகிதம் அதிகரித்ததே காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளி சுற்றுலா செல்லும் ஜெஃப் பெசோஸ்: உலக பணக்காரர்களுள் ஒருவரான ஜெஃப் பெசோஸ் விண்வெளி சுற்றுலா செல்கிறார். இன்று மாலை 6.30 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது.

இலங்கை அணி பேட்டிங்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com