சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இயற்கை விவசாய உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் குறித்த கண்காட்சி சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இயற்கையை விட்டு விலகிவரும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் செம்புலம் என்ற அமைப்பு விவசாய உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் குறித்த கண்காட்சியை சென்னை பெருங்குடியில் ஏற்பாடு செய்துள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 30 வகையான தமிழக கால்நடை இனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. கலப்பு இல்லாத ஆடு, மாடு, கோழி, நாய், வாத்து என பல்வேறு கால்நடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஏராளமான கடைகளும் அமைக்கப்படவுள்ளன. மேலும், இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு குறித்து அவை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.
பாரம்பரிய விளையாட்டுகளும், கரகம், சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் கலைகளும், இந்தக் கண்காட்சியில் அரங்கேற்றப்படுகின்றன. தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.