“சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி வாக்குப்பதிவு முடிந்தது” - சத்யபிரதா சாஹூ
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவுமின்றி நிறைவடைந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளன. மாலை 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குப் பதிவாகியுள்ளது. மேலும் சில இடங்களில் வாக்குப்பதிவு கொஞ்ச நேரம் நீட்டிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அத்துடன் மதுரையில் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டு நடத்தப்பட்டது. எனவே இறுதியாக இந்தச் சதவிகிதம் சற்று அதிகரிக்கும். இறுதி எண்ணிக்கையில் 70% முதல் 72% வரை வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்த்துள்ளோம்.
ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில கோளாறுகள் இருந்ததாக தெரிகிறது. அதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை. இதையடுத்து வாக்கு இயந்திரங்களை, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவருவோம். அதன்பின்னர் அனைத்து கட்சியினர் முன்னிலையில் சீலிட்டு பாதுகாப்பாக வைப்போம். பின்னர் அதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நாள் வரை தீவிரமாக பாதுகாப்போம்” எனத் தெரிவித்தார்.

