"தமிழ்நாட்டில் 7,297 பேருக்குப் பாம்புக்கடி" - திருவண்ணாமலை முதலிடம்!
தமிழ்நாட்டில் பாம்புக் கடியால் கடந்த ஆறு மாதங்களில் 7 ஆயிரத்து 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் மற்றும் புதர் மண்டி கிடக்கும் பகுதிகளில், அதிக அளவில் பாம்புக்கடி சம்பவங்கள் நடப்பது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 572 பேரும், விழுப்புரத்தில் 485 பேரும், திருச்சியில் 480 பேரும், கோவையில் 411 பேரும், தருமபுரியில் 361 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 186 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு விரியன் ஆகிய விஷப் பாம்புகளின் கடியால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடிக்கான மருந்துகள் உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டதாகப் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

