சிறைகளில் செய்திச் சேனல்களை ஒளிபரப்பக் கூடாது - சிறைத்துறை தலைவர்

சிறைகளில் செய்திச் சேனல்களை ஒளிபரப்பக் கூடாது - சிறைத்துறை தலைவர்
சிறைகளில் செய்திச் சேனல்களை ஒளிபரப்பக் கூடாது - சிறைத்துறை தலைவர்

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் செய்திச் சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்று சிறைத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். என்போன்று சிறையில் உள்ளவர்களுக்கு தொலைக்காட்சி செய்தி பார்ப்பதுதான் ஒரே பொழுதுபோக்கு. 

இந்நிலையில், மதுரை சிறையில் காலாவதியான பழைய ஆண்டனா முறையில்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்படுகின்றன. இதில் இந்தி மொழியில் மட்டுமே நிகழ்ச்சிகள், செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனால், எனது தாய்மொழியான தமிழ் மொழியில் செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை.

எனவே பிற சிறைகளில் உள்ளதுபோல் மதுரை மத்திய சிறையிலும் டிஜிட்டல் முறையில் பொதிகை உள்ளிட்ட தமிழ் சேனல்களை ஒளிபரப்ப உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். ரவிசந்திரனின் கோரிக்கையை ஏற்று பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் சசிதரன் , ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைத்துறை கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக சிறைத்துறை டிஜிபி அசுதோஷ் சுக்லா சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். 

அந்த சுற்றறிக்கையில், ‘சிறைகளில் செய்திச் சேனல்களை தவிர மற்ற தமிழ்ச் சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க’ வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ் திரைப்படங்கள், இதர பொழுதுபோக்கு தமிழ் சேனல்களை சிறைகளில் ஒளிபரப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com