திருவள்ளூர்: வாலிபால் விளையாட நேபாளம் சென்ற தமிழக வீரர் ரத்தவாந்தி எடுத்து மரணம்!

திருவள்ளூர்: வாலிபால் விளையாட நேபாளம் சென்ற தமிழக வீரர் ரத்தவாந்தி எடுத்து மரணம்!
திருவள்ளூர்: வாலிபால் விளையாட நேபாளம் சென்ற தமிழக வீரர் ரத்தவாந்தி எடுத்து மரணம்!

நேபாளம் நாட்டிற்கு வாலிபால் விளையாட சென்ற ஆகாஷ் என்ற வீரர் ஓய்வு அறையில் ரத்தவாந்தி எடுத்து இறந்துவிட்டதாக தகவல் வந்த நிலையில், மகனின் உடலை கைப்பற்றி தரவேண்டியும், மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் அவரது பெற்றோர்.

விளையாட்டில் சாதித்து விட்டு நாடு திரும்புவார் என பெற்றோர் காத்திருந்த நிலையில், விளையாட சென்ற இடத்தில் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு கலங்கி நிற்கிறது திருவள்ளூரைச் சேர்ந்த வாலிபால் வீரர் ஆகாஷ் என்பவரது குடும்பம்.

திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நேருதாசன்-லதா தம்பதி. இவர்களுக்கு ஆகாஷ் (27) மற்றும் ஆதவன்(24) ஆகிய 2 மகன்களில் ஆகாஷ் வாலிபால் விளையாட்டு வீரர். சிறுவயது முதல் விளையாட்டில் ஆர்வத்துடன் இருந்த அவர், பொறியியல் பட்டப்படிப்பு படித்து விட்டு வாலி பால் ஆர்வத்தால் அம்பத்தூரில் உடற்கல்வி ஆசிரியராகவும் பணி புரிந்து வந்துள்ளார். தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி பல பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தான், ஈரோட்டில் உள்ள யூத் ஸ்போர்ட்ஸ் ப்ரமோஷன் அசோசியேசன் என்ற அமைப்பு மூலம் கடந்த 21-ஆம் தேதி நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். நேற்று (25.12.2022) காலை 11.00 மணியளவில் நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டில் முதல் சுற்றில் வெற்றி பெற்று ஓய்வு எடுக்க சென்றுள்ளார். பின்னர் ஓய்வு அறையில் ரத்தவாந்தி எடுத்து மயக்கம் அடைந்த ஆகாஷை சக விளையாட்டு வீரர்கள் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஆகாஷின் பெற்றோருக்கு பயிற்சியாளர் நாகராஜன் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து செய்வதறியாத தவித்தனர். மேலும் நேபாளம் நாட்டில் உயிரிழந்த மகனின் உடலை கொண்டு வருவதில் சிரமம் இருப்பதால், ஆகாஷின் உறவினர்கள் மற்றும் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு ஒன்றை அளித்தனர். மகனின் இறப்பு செய்தியை கேட்ட பெற்றோர் கண்கலங்கி நிற்கின்றனர். உடல் நலத்துடன் சென்று விளையாட்டில் சாதித்து விட்டு வருவதாக கூறி சென்ற தம் மகன் இறந்து விட்டார் என்ற செய்தி நம்ப முடியவில்லை எனவும், மகனது இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆகாஷின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு உரிய முறையில் விசாரித்து தமது மகனின் சடலத்தை எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர்.சாதித்து விட்டு வருவதாக கூறி சென்ற மகன் சடலமாகி விட்ட செய்தி கேட்டு ஆகாஷின் பெற்றோர் மட்டுமின்றி கைவண்டூர் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com