தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே தமிழ்நாடு அரசுப் பணி - பேரவையில் அனல்பறந்த விவாதம்

தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே தமிழ்நாடு அரசுப் பணி - பேரவையில் அனல்பறந்த விவாதம்
தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே தமிழ்நாடு அரசுப் பணி - பேரவையில் அனல்பறந்த விவாதம்

தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்ற சட்டம் நிறைவேறியது. தமிழர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாமக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில், தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என 2021 டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், திருத்தம் செய்யப்பட்டுள்ள சட்டத்திலும் விண்ணப்பிக்க கூடிய நபர் எவரும் என குறிப்பிடுவதால் பிற மாநிலத்தவரும் தேர்வெழுத வாய்ப்பாக அமைவதாக கூறினார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் சிலர் ஆட்சியாளர் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழை பயின்று அரசுப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது என கேள்வி எழுப்பிய வேல்முருகன், ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் குடியிருக்கும், தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, வெளிமாநிலத்தவரும் தேர்வெழுத அனுமதித்தால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கையேந்தும் சூழல் உருவாகும் என்பதால், சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதே கருத்தை வலியுறுத்திய விசிக உறுப்பினர் ஆளூர் ஷாநாவாஸ், உறுப்பினர்கள் கோரும் திருத்தங்களை மேற்கொண்டால் தமிழக மக்கள் அனைவரும் சட்டத்தை வரவேற்பார்கள் என கூறினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், இன்றைக்கே இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகியிருப்பதாகவும், இன்றைக்கு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வராவிட்டால், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்பதே ரத்தாகி விடும் என கூறினார்.

உறுப்பினர்கள் கோரிய திருத்தங்கள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, இந்த சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது.

இதற்கிடையில், சென்னை கொட்டிவாக்கத்திலுள்ள நெல்லை நாடார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியபோது, “தமிழை பற்றி பேசுகிறோம். அதனை முதன் முதலில் ஆட்சி மொழியாக கொண்டு வந்தவர் காமராஜர், பயிற்று மொழியாக ஆக வேண்டும் என்று சட்டமன்றத்தில் கொண்டு வந்தவர்.

அப்போது நிதிநிலை தமிழில் வாசிக்கப்பட்டது. இன்று நிதிநிலை தாக்கல் செய்தவருக்கு தமிழ் வராது. ‘1961-ல் தமிழ்நாடு சட்டமன்றம், தமிழ்நாடு அரசு என்று அழைக்கலாம், இதற்கு சட்டம் இயன்ற வேண்டாம். அப்படி அழைப்பது தவறில்லை’ என காமராஜ் கூறினார். பின்னர் அண்ணாதுரை சட்டம் இயற்றினார்.

ஆளுநர் ஒரு பகுதியை விடுவித்தாக கூறுகிறார்கள். காமராஜ் பெயரை விடுவித்து தமிழகத்தில் நல்லாட்சி என்ற சொல்ல முடியாது. சமூக நீதி என்றால் என்ன?, அனைவருக்கும் அனைத்து கிடைக்க வேண்டும் என்பது. அதனால் தான் புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடதிட்டம் கொண்டு வருகிறோம். தமிழ்நாடு என்பது நமக்கு பெருமை சேர்ப்பது தான், தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும், தனிநாடு ஆகி விட கூடாது.

நாம் எல்லாம் தமிழர்கள், தமிழ் ரத்தம் ஓடுகிறது. தமிழுக்கு ஆபத்து என்றால் முன் நின்று காப்போம். புதியகல்வி கொள்கை என்ன சொல்கிறது என்றால், தாய்மொழியை கற்றுக் கொண்டு இன்னொரு மொழியை கற்று கொள்வது தவறில்லை. உலக அரங்கில் எடுத்து செல்லவே புதியகல்விக் கொள்ளை” எனப் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com