சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!
சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

காலணியை கழற்ற சொன்ன விவகாரத்தில், சிறுவனிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 27 யானைகளுக்கான புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது, முகாமிலுள்ள விநாயகர் கோயிலில் வளர்ப்பு யானைகள் கிரி, கிருஷ்ணா ஆகியவற்றிற்கு பூஜை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்க கோயிலுக்குள் செல்வதற்காக தன்னுடைய காலணிகளை பழங்குடியின சிறுவர்களை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்ற கூறினார்.

சிறுவனை ஒருமையில் அழைத்து தனது காலணிகளை அமைச்சர் கழற்ற வைத்ததாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தமது செயலில் உள்நோக்கம் எதுவும் இல்லை என அமைச்சர் விளக்கம் அளித்தார். பேரன் வயதில் இருந்த சிறுவர்களை அழைத்ததில் எந்த நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது பழங்குடியின மாணவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், காலணியை கழற்ற சொன்ன சிறுவனை குடும்பத்தோடு அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுவன் மற்றும் அவரது பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com