
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்குமாறு முதலமைச்சர் பழனிச்சாமிக்கு மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப் படலாம் எனத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்குமாறு முதலமைச்சர் பழனிச்சாமிக்கு 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் பிரதீபா, "தமிழகத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா தாக்கம் அதிகரித்துத்தான் வருகிறது. தமிழகத்தில் அரசு எடுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிப்பது தொடர்பாகத் தமிழக அமைச்சரவை நாளை மாலை முடிவெடுக்க உள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூடுகிறது.