இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதன்பின்னர், திமுக சார்பில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்க உள்ளார்.
இதனையடுத்து வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இம்மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று பேச உள்ளனர். அப்போது முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளிக்க உள்ளார்.
அந்நேரத்தில் வனத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், சுற்றுச்சூழல் தொடர்பான மானிய கோரிக்கையின்போது கூடங்குளம் அணுக்கழிவு மையம் தொடர்பாக அமைச்சர் கருப்பணன் பதிலளிப்பார் எனத் தெரிகிறது.