நூற்றாண்டு கொண்டாடும் தமிழ்நாடு சட்டமன்றம்: கடந்து வந்த பாதை

நூற்றாண்டு கொண்டாடும் தமிழ்நாடு சட்டமன்றம்: கடந்து வந்த பாதை
நூற்றாண்டு கொண்டாடும் தமிழ்நாடு சட்டமன்றம்: கடந்து வந்த பாதை

நூற்றாண்டு கொண்டாடுகிறது தமிழ்நாடு சட்டமன்றம்., நாடு முழுவதும் பரவிய பல புரட்சிகர சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்ட இடம் தமிழ்நாடு சட்டமன்றம். வியத்தகு வரலாறும், சீரிய பெருமையும் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றம் பழம்பெருமையும் கொண்டது.

சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் இருந்தே சட்டமன்றம் செயல்பட்ட பெருமை கொண்டது தமிழக சட்டமன்றம். 1920 ஆம் ஆண்டே தேர்தலை சந்தித்த மன்றம் தமிழக சட்டமன்றம். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டமன்றம் 1921 ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் விலிங்டன் பிரபு தமிழக சட்டமன்றம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டது.

முதல் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நடத்தப்பட்டநிலையில், 1923, 1926, 1930 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த தேர்தல்கள் நடத்தப்பட்டன. பெண்கள் தேர்தலில் வாக்களிக்க 1920 ல் தடை இருந்தது. சட்டத்தின் இந்த பிரிவை நீக்கி பெண்களுக்கும் வாக்களிக்க வகை செய்யும் தீர்மானம் 1921 ஏப்ரல் 1 ஆம் தேதி சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. எனினும் 1923-ல் தான் இது நடைமுறைக்கு வந்தது. இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் 1926 முதல் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும், நியமிக்கப்படவும் தகுதி பெற்றனர்.

தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமைக்குரியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி, 1937 முதல் சென்னை உள்ளிட்ட மாகாணங்களில் ஈரவைகளை கொண்ட சட்டமன்றங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவை சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை என்று அழைக்கப்பட்டன. 1952-ல் நடைபெற்ற தேர்தலில் வயது வந்த அனைவரும் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் தமிழக சட்டமன்றத்தின் முதல் நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியன், 1957-58 ல் முதல்முறையாக பட்ஜெட் உரையாற்றினார்.

1986-ல் எம்ஜிஆரால் மேலவை கலைக்கப்பட்ட நிலையில், ஓரவை மன்றமாக தமிழ்நாடு சட்டப்பேரவை மாறியது. தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, இடஒதுக்கீடு, நில அரசுகளுக்கும் கொடியேற்றும் உரிமை, மாநிலப்பெயர் மாற்றம், இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற புரட்சிகளுக்கு வித்திட்ட இடம் தமிழ்நாடு சட்டமன்றம்.

ஆட்சி கலைப்புகள், குடியரசு ஆட்சி நிறுவப்பட்ட நிகழ்வுகள், சர்ச்சைகள், வாக்குவாதங்கள், வெளிநடப்புகள், கூச்சல் குழப்பங்கள் என எத்தனை எத்தனையோ அசாதாரண சம்பவங்களும் இங்கு அரங்கேறியிருக்கின்றன. நூறாண்டுகளை புரட்டிப்பார்க்கும்போது தமிழ்நாடு சட்டமன்றம் கடந்து வந்திருக்கும் பாதை முழுவதும் வரலாற்றின் முக்கிய தடங்கள் பதிந்து நிறைந்திருக்கின்றன. நூற்றாண்டு காணும் தமிழ்நாடு சட்டமன்றம் பெருமைக்குரிய, மதிப்பிற்குரிய மையமே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com