அரியவகை இனமான வெண்பிடரி பட்டாணி குருவியை படம்பிடித்த தலைமையாசிரியர்!
அழிந்து வரும் பறவை இனமான வெண்பிடரி பட்டாணி குருவியை பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் படமெடுத்து அசத்தியுள்ளார்.
சேலம் கிருஷ்ணபுதூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் பறவைகள் மீதுள்ள காதலால் விடுமுறை நாட்களில் பறவைகளை தேடி பயணிப்பது, பறவைகளை புகைப்படம் எடுப்பது போன்ற பல செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார். இப்படி ஒருநாள் அவர் பறவைகளை தேடி பயணம் செய்தபோது அவர் கேமராவில் சிக்கியது ஒரு பறவை. எவர் கண்ணிலும் சிக்காத அரிய பறவையினமான வெண்பிடரி பட்டாணி குருவிதான் அந்த பறவை.
கடந்த வருடம் பறவைகளை தேடிக்கொண்டு சேலத்தின் மலைப்பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார் செந்தில். அப்போது அவர் கண்ணில் ஒரு பறவை தென்பட்டுள்ளது. உடனடியாக தன் கேமராவில் பதிவு செய்த அவர், அதனை தேன்சிட்டு என நினைத்துள்ளார். ஆனால் தேன் சிட்டை விடவும் அந்த பறவையிடம் நிறைய மாற்றங்களை பார்த்த செந்தில் இது குறித்து சக பறவைகள் ஆர்வலர்களிடம் கேட்டுள்ளார். செந்தில் எடுத்த புகைப்படத்தை பார்த்த ஆர்வலர்கள் அது வெண்பிடரி பட்டாணி குருவி என கண்டுபிடித்தனர்.
முதன்முதலாக சென்னை மாகாணத்தில் 1934-ம் ஆண்டு வெண்பிடரி பட்டாணி குருவி கண்ணில் சிக்கியது. அதன் பின் ஈரோடு, சேலம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா என பல பகுதிகளில் இந்தக்குருவி தென்பட்டதாக பலரும் கூறி உள்ளனர். சமீபத்தில் தேனியில் நடைபெற்ற பறவைகள் ஆர்வலர்கள் கலந்துகொண்ட சந்திப்பின்போது பேசிய செந்தில் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் பேசிய அவர், நான் மீண்டும் மீண்டும் மலைப்பகுதிகளில் பயணம் செய்தேன்.
கடந்த ஒரு வருடத்தில் 10 ஆயிரம் கிமீ பயணம் செய்திருப்பேன். ஆனால் ஒரே ஒருமுறை மட்டுமே அந்த பறவையை நான் பார்த்தேன். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் படி வெண்பிடரி பட்டாணி குருவி என்பது அழிந்து வரும் பறவை இனமாக உள்ளது என தெரிவித்தார்.