“தமிழக அரசும், மத்திய அரசும் இரட்டை இயந்திரங்கள்” - பியூஷ் கோயல்
தமிழக அரசும் மத்திய அரசும் இரட்டை இயந்திரங்கள் போல் சேர்ந்து இயங்குவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள் ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசின் திட்டம் இன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இணைந்து திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணயமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பியூஷ் கோயல், “ இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு கடவுள் மன வலிமை தர வேண்டிக்கொள்கிறேன். தக்க பதிலடி கொடுக்கப்படும். தீவிரவாதம் முற்றிலும் இந்தியாவில் இருந்து ஒழிக்கப்படும். அவர்கள் உயிர் தியாகம் வீணாக போகாது. விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கியுள்ளது. அம்மா உணவகத்தை இன்று மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன.
வந்தே பாரத் ரயில் தயாரித்த ஐ.சி.எப் பொறியாளர்கள் மற்றும் சென்னைக்கு நன்றி. சிலர் வந்தே பாரத் எனப்படும் ட்ரெயின் 18 ரயிலை கிண்டல் செய்கிறார்கள். என்னுடைய பொறியாளர்கள் தயாரித்த ரயிலை கேலி செய்வோருக்கு எனது கண்டனங்கள். ஜி.எஸ்.டி அமல் படுத்தப்பட்டது முதல், மின்சார சேவை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் - மத்திய அரசும் இரட்டை இயந்திரங்கள் போல் ஒன்று சேர்ந்து இயங்குகின்றன. இருவருக்கும் இடையேயான இந்த கூட்டணி தொடரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

