"ஆங்கிலேயேர் ஆட்சிக்கு முன் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கல்வி கற்றனர்"- ஆளுநர்

"ஆங்கிலேயேர் ஆட்சிக்கு முன் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கல்வி கற்றனர்"- ஆளுநர்
"ஆங்கிலேயேர் ஆட்சிக்கு முன் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கல்வி கற்றனர்"- ஆளுநர்

'ஒரு நாடோ, சமுதாயமோ முன்னேற வேண்டும் என்றால் அங்குள்ள மகளிர் முன்னேற வேண்டும்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் தமிழகத்தின் பெண் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மகளிருக்கு தோழமையான சமுதாயமாக நமது சமுதாயம் இருந்தது இல்லை. சமுதாயத்தில் சாதித்த மகளிர் அனைவரும் பல தடங்கல்களை இன்னல்களை கடந்தே சாதித்து உள்ளனர். சமுதாயத்தில் மகளிருக்கு வாய்ப்பளிக்காத, மகளிரை பின் தள்ள கூடிய எந்த ஒரு நாடும் சமுதாயமும் வளர்ந்தது இல்லை” என தெரிவித்தார்.

மேலும், “ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக மகளிர் கல்வி பயின்றுள்ளனர். அதன்பின் படிப்படியாக அவர்கள் பின் தள்ளப்பட்டு உள்ளனர். பின்னர் வீட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளனர்” என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசுகையில், “அதனால்தான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இந்தியா உண்மையான சுதந்திரம் பெற வேண்டும் என்றால், வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், பெண்கள் வெளி வர வேண்டும் என வலியுறுத்தி, பாரதியார் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பேசி வந்தனர்” எனக்கூறி பாரதியாரின்

‘பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி’ என்ற பாடலை ஆளுநர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “2010 ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் ஆண்கள் முக்கிய பங்கு வகித்தனர். 2010 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற தேர்தல்களில் மகளிர் வாக்குகள் முக்கிய பங்கு வகித்து உள்ளன. குறிப்பாக தங்கள் கணவர் கூறும் கட்சிக்கு அவர்கள் வாக்கு அளிக்கவில்லை. இது போன்ற மிக பெரிய மாற்றங்கள் நடைபெற்று உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் இருந்தனர், உண்மையில் பெண் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளனர் என்ற காரணம் இல்லை. மகளிர் கருவாக இருக்கும் நேரத்தில் என்ன குழந்தை என கண்டறிந்து பெண்கள் என்றால் அதனை கலைத்தனர். மீறி பிறந்தாலும் அவர்கள் கொல்லப்பட்டனர். இதனாலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருந்தது.

இன்று ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். தமிழகத்தில் தற்போது மகளிர் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். கல்வியில் ஆண்களை விட இன்று பெண்கள் சிறப்பாக பயில்கின்றனர், பட்டங்கள் அதிகமாக பெறுகின்றனர். அதேபோல அதிக மதிப்பெண்கள் பெறுவதும் அவர்கள் தான். 7 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் 55% மக்கள் கழிப்பிடங்கள் இல்லாமல் இருந்தனர். இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். ஆனால் இன்று, இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கழிப்பறைகள் உள்ளது” என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. உலக அளவில் மிக பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு இருந்தாலும் இந்தியாவில் பொருளாதாரம் வளர்கிறது. உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சி அடைய இந்தியாவை நோக்கி உள்ளது. இதே சூழலில் இந்தியா பயணித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 நாடக மாற வேண்டும், மாற வேண்டும் என கூறுவதற்கு காரணம்... உலகம் பல சிக்கல்களை இன்று எதிர்கொண்டு வருகிறது.

காலநிலைமாற்றம் காரணமாக பூமியின் வெப்பம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதன் காரணமாகவே நாம் எரிபொருள் பயன்படுத்துவதை தவிர்த்து உள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்க கூடிய இயந்திரங்கள் இன்று 40% பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2032 ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் இதில் முதல் இடம் பெறுவோம். எனவே சாதித்த பெண்கள் அனைவரும் இதோடு நிறுத்தி விடாமல் உங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் இதுகுறித்து பேச வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com