தமிழகத்தில் தொழில்தொடங்க உகந்த சூழல் நிலவுவதாக கூறியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தொழில் தொடங்குவதில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால் தம்மிடம் சொல்லலாம் என்று கூறியுள்ளார்.
ஜெயின் இண்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒவ்வொருவரும் இருக்கும் பகுதியில் உள்ள மொழியை கற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்தார். இதன் அடிப்படையிலேயே தாம் தமிழை கற்றுக்கொள்வதாகவும் அவர் பேசினார். தமிழகத்தில் தொழில்துறை நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. பல்வேறு தடைகள் இருப்பதாக புகார் இருந்தது. இதற்காக தொழில் தொடங்க வசதியாக ஒற்றைச் சாளார முறை அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதனால் தடைகள் அகன்றுவிடும். நீங்கள் தமிழகத்தில் தாராளமாக தொழில் தொடங்கலாம். ஏதாவது பிரச்னைகளை சந்தித்தால் உங்களுக்காக ஆளுநர் மாளிகை திறந்தே இருக்கும். முதலமைச்சருக்கும் எனக்கும் நல்ல நேசம் இருக்கிறது. அவரிடம் சொல்லி பிரச்னைகளை தீர்த்துவைக்கிறேன். அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனத் தெரிவித்தார்.