அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் - 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம்

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் - 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம்
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் - 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம்

அதிமுக தலைமை அலுவலக கலவரம், அலுவலக ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தை சூறையாடியப் புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறால், இருதரப்பினருக்கும் சுவாதீன பிரச்சனை இருந்ததாகவும், அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டதாகவும், ஆனால் அவ்வாறு எந்த பிரச்சனையும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார். அந்த சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதிமுக அலுவலகத்திற்குள் தாங்கள் சென்றபோது, அலுவலகத்தை திறந்து பார்த்தபோது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 11-ல் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தாகவும், இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராஜம்அளித்த புகாரை பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினர், ஒப்புகை சீட்டு கூட வழங்கவில்லை எனவும், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டப் பிறகே புகாரை பெற்றதற்கான சான்று கிடைக்கப்பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 23-ம் தேதி புகார் அளித்தும், புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.

இதனைபதிவு செய்த நீதிபதி, வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com