கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... முக்கிய அம்சங்கள்

கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... முக்கிய அம்சங்கள்
கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... முக்கிய அம்சங்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இறப்பைக் குறைக்கும் நோக்கில் கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக மருத்துவம் - மக்கள் நல் வாழ்வுத்துறை. இதன் சிறப்பம்சங்கள் என்ன? 

தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2 நாட்களுக்கும் மேலாக 250-ஐ நெருங்கி பதிவாகி வருகிறது. இதையடுத்து, தொற்று நோய் நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தமிழக அரசின் கோவிட் சிறப்பு நிபுணர் குழு உள்ளிட்ட மருத்துவர்கள் இணைந்து புதிய சிகிச்சை வழிகாட்டு முறைகளை வகுத்தளித்தனர். இது அரசாணையாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"96-க்கும் மேல் ஆக்சிஜன் அளவுள்ள நோயாளிகள் எவரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படக் கூடாது" என்பது இந்த அரசாணையின் முக்கிய அம்சம்.

இந்த அரசாணைப்படி கோவிட் நோயாளிகள் 4 வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.

1. வீட்டுத்தனிமையில் இருப்பவர் - இந்தவகையினருக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்தாலும், உடல்வலி, தொண்டைவலி, மூச்சுவிடுதலில் சிரமம், தொடர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, இருமல், நாக்கில் சுவையும் , மூக்கில் மணமும் தெரியாமல் இருந்தால் கொரோனா நோயாளியாகவே கருதப்படுவார். இவர்கள் பரிசோதித்து விட்டு ஆர்டிபிசிஆர் முடிவுக்காக காத்திராமல் , மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை உடனடியாக எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் இந்த நெறிமுறைகளை வகுத்த குழுவில் ஒருவரான அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன்.

2. வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருப்போர் 2-ஆம் வகை-

இந்த வகையினருக்கும் அனைத்து அறிகுறிகள் இருக்கும்.எனினும் ஆக்சிஜன் அளவு 96க்கு கீழ் குறைந்து, 95 ஆக மாறுபவர்கள். இவர்களும் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்கள்

3. கொரோனா சிகிச்சை மையங்கள் , கொரோனா பராமரிப்பு மையங்களில் இருப்போர்:

ஆக்சிஜன் அளவு 90-94 க்குள் இருப்போர், ஒரு நிமிடத்திற்கு 24 முதல் 30 முறை மூச்சுவாங்குவோர் இங்கு சிகிச்சை பெற வேண்டும். இப்பிரிவில் அனுமதிக்கப்படுவோருக்கு இரத்த தட்டணுக்கள் குறைந்தாலோ அல்லது 90-க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணி மேற்கொள்ளப்படும்

4. மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுவோர்:

90% க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தவர்கள், ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேல் மூச்சு வாங்குவோர் இங்கு அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு ஆக்சிஜன் தெரபி வழங்கி தீவிர சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகங்கள் மேற்கொள்ளும். இந்த ஆணை 14 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்பது முக்கியமானது. இந்த வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதால் இறப்புகளை எந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடிகிறது என்பதை ஆய்வு செய்த பின் இதைத் தொடர்வதா இல்லையா என நிபுணர் குழு மீண்டும் முடிவு செய்யும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com