செயலி மூலமான இருசக்கர வாகன பயணத்துக்கு அனுமதி இல்லை - போக்குவரத்துத் துறை
சென்னையில் அனுமதி பெறாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்த புகாரில் 18 இருசக்கர வாகனத்தை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் OLA உள்ளிட்ட ஆப் மூலமாக கார் மற்றும் ஆட்டோ வாகனத்தை ஆன் லைனில் புக் செய்து மக்கள் பயணம் செய்கின்றனர். இதற்கு மட்டும் தமிழகத்தில் போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதுபோன்ற ஆப் மூலம் இருசக்கர வாகனத்திலும் புக் செய்து பயணம் செய்ய கோவா, ஆந்திரா போன்ற மாநிலத்தில் மட்டுமே அனுமதி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை இதுபோன்ற நடைமுறைக்கு போக்குவரத்துத்துறை இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
கால்டாக்சி மூலமாகவே குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இரு சக்கர வாகனத்தில் வாடகை என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டால் பயணிகளின் பாதுகாப்புக்கு கேள்வி குறியாக இருக்கும் என காவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் அனுமதியின்றி வாடகை முறையில் இயக்கப்பட்ட 18 இருசக்கர வாகனத்தை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் வசூலித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக இரு சக்கர வாகனத்தில் புக் செய்து பயணம் செய்யும் முறைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது இரண்டு ஆன் லைன் புக் செய்யும் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இந்நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்