10-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓ.பன்னீர்செல்வம்
தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக அரசின் இந்த 5 ஆண்டுக்கான கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் இடம்பெறாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் வருவாயை விட செலவு அதிக இருக்கும் என ஏற்கெனவே கணிக்கப்பட்ட நிலையில், இந்த முறையும் தமிழக அரசின் பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், ஏராளமான புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் அப்போது நிதித்துறையை கவனித்து வந்த ஜெயக்குமார், 2017-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த வகையில் 2017ஆம் ஆண்டை தவிர்த்து 2011 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான தமிழக பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் ஓபிஎஸ் தற்போது 10-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

