”தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து திமுக ஆட்சி செய்கிறது” - அண்ணாமலை விமர்சனம்

”தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து திமுக ஆட்சி செய்கிறது” - அண்ணாமலை விமர்சனம்
”தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து திமுக ஆட்சி செய்கிறது” - அண்ணாமலை விமர்சனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக செயின் அப் கமெண்டில் (chain of command) உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்றும், அதேபோல் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தெளிவாக இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமான "ரோஸ்கர் மேளா" திட்டத்தை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார். இந்தத் திட்டம் 75 இடங்களில் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இதன் முதன் கட்டமாக 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான பணி ஆனையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். மேலும், இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இன்று மிக முக்கிய நாள். டிசம்பர் 2023-க்குள் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்தியாவில் 75 இடங்களில் இன்று 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கானவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதற்கு பாரத பிரதமருக்கு நன்றி. இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் சரியாக வேலைக்கு பதிவுசெய்து மத்திய அரசு வேலையில் சேருங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு பக்கம் இந்தி திணிப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது, ஒரு பக்கம் பாஜக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “சென்ற ஆண்டு 10-ம் வகுப்பில் 52,000 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தாய்மொழியை வளர்க்க தி.மு.க. என்ன செய்துள்ளது. இந்தியாவில் அதிக பொறியாளர்கள் உருவாக்கும் தமிழகத்தில் தமிழில் பாடம் உள்ளதா?. பயிற்று மொழி தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பித்துள்ளதா?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

மேலும், திமுக அனைத்தையும் குருட்டுத்தனமாக எதிர்கிறது என்று பேசிய அவர், தமிழ் மொழியை வியாபாரம் செய்து தி.மு.க. ஆட்சி செய்கிறது, தி.மு.க. இப்படியே சென்றால் தமிழுக்கு சமாதி கட்டி விடுவார்கள் என்றார். “மேயராக உள்ள சகோதரிகள் அதிகப் பேரை இந்தி எதிர்ப்புப் குறித்து பேச வைக்கின்றனர். ஆனால் அவர்கள் தமிழ் எப்படி உள்ளது. தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசியபோது கூட, இந்தியாவில் நம் அரசின் கொள்கை மூன்று மொழி படிக்க வேண்டும். மூன்றாவது மொழி அவரவர் விருப்பம் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி 8 ஆம் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று சொன்னார். முழுமையாக இந்தி பேசக்கூடிய மாநிலங்கள் category A, நம்மை போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் category C என பிரித்து வைத்துள்ளனர். அதன்படி அந்த மாநிலங்களில் இந்தியில் பாடங்களை கொண்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்துப் பிரிவுகளுக்கும் பயிற்று மொழி தமிழ் என தமிழக அரசு அறிவித்தால், பாஜக அதை நிச்சயம் வரவேற்கும். இது மக்கள் பிரச்சினை இல்லை. இந்தி திணிப்பு எங்கும் இல்லை என்று மக்களுக்கு தெரியும். இது காங்கிரஸ் காலத்தில் நடந்தது” என்று அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆணையம் குறித்த கேள்விக்கு, “தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் குற்றவாளி யார் என்பது தெளிவாக கூறவில்லை. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் என் கிணற்றை காணவில்லை என்பது போல் உள்ளது. இன்றும் யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. உயர் அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. தவறு செய்தவர்கள் மேல் மட்டும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான ஆணையத்தின் அறிக்கையில் ஆசையை தூண்டும் விதமாகவே உள்ளதே தவிர தெளிவாக இல்லை” என அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்தில், இரண்டு மூன்று விசயங்களை உன்னிப்பாக பார்க்க வேண்டும். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேசும்போது, வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமா வேண்டாமா என்று பேசினார்.

இதையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசியல் பார்வையில் அதிகாரிகளையும் பார்க்க ஆரம்பித்தால் சரி இல்லை. புதிய ஆதாரங்களை எதையும் இந்த ஆணையம் சொல்லவில்லை. வெறும் காரணங்களை மட்டும் சொல்லி இருக்கிறார்கள். அதிகாரி சொன்னதையும் திரித்து சொல்லி இருக்கிறார்கள். இந்தியாவின் உச்சக்கட்ட மருத்துவ நிபுணர் குழுவான எய்ம்ஸ் சிகிச்சையை சரி என்று சொல்லும்போது இவர் எப்படி சரி இல்லை என்று சொல்கிறார். ஆறுமுகசாமி ஆணையத்தின் படி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடவில்லை.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிகையில் எந்தவித புதிய தகவலும் இல்லை. ஆணையத்தின் அறிக்கையை உண்மையை கண்டறியும் தன்மை இல்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்து தவறு என்று ஆணையம் கூறியுள்ளது. எங்களை பொறுத்தவரை யாராவது கையில் கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான். பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள் என்றால் சமூக விரோதி தான். திருமாவளவன், சீமான், கனிமொழி, ஸ்டாலின் எல்லாம் கருத்து சொல்லவில்லையா ?

ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது. ரஜினிகாந்த் பேசிய கருத்து அவரது பார்வையில் சரியானது தான். அருணா ஜெகதீசனின் ஆணைய அறிக்கையில், ரஜினிகாந்தின் கருத்தை பற்றி கூறியதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரின் கருத்தை பற்றி ஆணைய அறிக்கையில் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது பேசியதை விட ரஜினி பேசியது ஒன்றும் தவறில்லை.

எடப்பாடி பழனிசாமி துப்பாக்கி சூடு பற்றி தொலைக்காட்சி மூலம் பார்த்ததாக சொன்னதில் என்ன தவறு. 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசயம் அவை. எடப்பாடி சொன்ன ஒரு கருத்தை திரித்து சொன்னது சரி இல்லை, எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி இருக்கிறார் என்று கூறுவது தவறு. எடப்பாடி பழனிசாமி எந்த சூழ்நிலையில் டிவி பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறியிருப்பார் என்று யோசிக்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்தியது தவறு என்று சொல்லவில்லை. துப்பாக்கி சூடு நடந்த விதம் தான் தவறானது.

பாஜக சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். அனைவரும் பட்டாசு வெடியுங்கள். சிவகாசி பட்டாசு விற்பனையாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். ஒரு நாளில் எந்த மாசும் நேராது. தீபாவளிக்கு எல்லோரும் நிறைய பட்டாசு வெடிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு இன்பம் பெருகும் அமைதியான தீபாவளி வாழ்த்துக்கள். சிவகாசி மக்கள் நிறைய கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக எல்லோரும் நிறைய பட்டாசுகள் வெடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com