செப். மாதம் தமிழகத்தில் 53% கூடுதல் மழை - வானிலை மையம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த மாதத்தில் மட்டும் 53 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ததாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அக்டோபர் மாதம் முதல் இரண்டு வாரங்கள் வரை தென்மேற்கு பருவமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் அதன்பின்னர், வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனவும் அவர் கூறினார்.
கடந்த ஜுன் 1ஆம் தேதி முதல் தற்போது வரை தமிழகம், புதுச்சேரியில் 38 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இது இயல்பைவிட 16 சதவீதம் அதிகம் என்றும் கூறினார். இந்த காலக்கட்டத்தில் சென்னையில் 59 சென்டிமீட்டர் மழை பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த மாதத்தில் மட்டும் 16 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இது வழக்கத்தைவிட 53 சதவீதம் அதிகம் எனவும் பாலச்சந்திரன் கூறினார். இதே காலத்தில் சென்னையில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியதாகவும் இது வழக்கத்தைவிட 92 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிட்டார்.
தெற்காசிய நாடுகளுக்கான வடகிழக்கு பருவமழையின் முன்னறிவிப்பின்படி, இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டியே இருக்கும் என தெரிவித்தார். இதனிடையே திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்றே உயரக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.