தமிழக மருத்துவர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை காமராஜ் புரத்தில் வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துக் கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடுதான் சேவையாற்றிய வருகிறார்கள். பணியின் போது அவர்களின் பாதுகாப்பு அவசியமானது. அதனை வலியுறுத்தி இன்று இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்கு முழுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் மருத்துவர்கள் சேவை சிறப்பாக உள்ளது” என்று கூறினார்.