‘சுந்தர் பிச்சையின் பூர்வீக சென்னை வீடு விற்பனை’ - மனமுடைந்து கலங்கிய தந்தை!

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்ந்த பூர்வீக சென்னை வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான மணிகண்டன் வாங்கியுள்ளார்.
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சைFile image

முதல் வீடு கட்டுவது அனைவருக்கும் பெரிய கனவு. ஆனால் மணிகண்டனுக்கு அவர் தன் முதல் வீட்டைக்கட்டும் இடம், அவரது கனவில் நினைத்துப் பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ் சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன், சென்னை அசோக் நகர் பகுதியில் அமைதியான குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் மூதாதையர் வீட்டை வாங்கியுள்ளார் என ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுந்தர் பிச்சையின் சென்னை வீடு
சுந்தர் பிச்சையின் சென்னை வீடு

தமிழ்நாட்டின் மதுரையில் ஸ்டெனோகிராஃபரான லக்‌ஷ்மி மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான ரெகுநாத பிச்சை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை. இவர் ஐ.ஐ.டி. காரக்பூரில் சேருவதற்குமுன் தன் பள்ளிப் படிப்பு மற்றும் குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் தான் கழித்துள்ளார்.

சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு, இடம் விற்பனைக்கு வருகிறது என்று கேள்விப்பட்ட மணிகண்டன் உடனடியாக அதை வாங்க முடிவு செய்துள்ளார். “சுந்தர் பிச்சை நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவர் வசித்த வீட்டை வாங்குவது என் வாழ்வில் பெருமைக்குரிய விஷயம்” என்று மணிகண்டன் பகிர்ந்துள்ளார். ஆனால் ஒப்பந்தம் செய்ய நேரம் எடுத்ததாம், கூகுள் சி.இ.ஓ.வின் தந்தை ஆர்.எஸ். பிச்சை அமெரிக்காவில் இருந்ததால் மணிகண்டன் நான்கு மாதங்கள் வரை காத்திருந்தாராம்.

சுந்தர் பிச்சை தனது பெற்றோருடன்
சுந்தர் பிச்சை தனது பெற்றோருடன்

சுந்தரின் தாய் மற்றும் தந்தைப் பற்றி பேசியுள்ள மணிகண்டன், “நான் அவர்களின் வீட்டுக்குச் சென்றபோது சுந்தரின் தாய் அவரே ஃபில்டர் காபி தயாரித்து எனக்குக் கொடுத்தார். முதல் சந்திப்பிலேயே இடம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் சுந்தரின் தந்தை என்னிடம் வழங்கினார்.

மணிகண்டன்
மணிகண்டன்

இவர்கள் இருவரது பணிவு மற்றும் அடக்கமான அணுகுமுறையைப் பார்த்து நான் வியப்படைந்தேன். தான் சுந்தர் பிச்சையின் தந்தை என எந்த இடத்திலும் அவர் பதிவு செய்யவில்லை. உண்மையில் கூகுள் சி.இ.ஓ.வின் தந்தை, பதிவு அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தார்.

ஆவணங்களை என்னிடம் ஒப்படைக்கும் முன் தேவையான அனைத்து வரிகளையும் அவர் செலுத்தியிருந்தார். சுந்தரின் தந்தை தாங்கள் இருந்த வீட்டைத் தானே இடித்து விட்டு, வெறும் நிலமாக என்னிடம் ஒப்படைத்தார். இது அவரின் முதல் சொத்து என்பதால் ஆவணங்களை என்னிடம் ஒப்படைக்கும்போது சில நிமிடங்கள் உடைந்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

சுந்தர் பிச்சையின் இடிக்கப்பட்ட வீடு
சுந்தர் பிச்சையின் இடிக்கப்பட்ட வீடு

“சுந்தர் தன் 20 வயது வரை இந்த வீட்டில்தான் வாழ்ந்தார். அவர் டிசம்பரில் சென்னை வந்தபோது வீட்டில் இருந்த பணம் மற்றும் சில உபகரணங்களை செக்யூரிட்டிகளுக்கு விநியோகித்தார். மேலும் அவர் தன் வீட்டு பால்கனியில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்” என்று பக்கத்து வீட்டுக்காரர் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com