விரைவில் தாம்பரம் ரயில் முனையம் செயல்படும் - ரயில்வே நிர்வாகம்
சென்னை தாம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது ரயில் முனையத்தின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
சென்னையில் தற்போது சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் முனையங்கள் செயல்பட்டுவரும் நிலையில், ரயில்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தாம்பரத்தில் மூன்றாவது முனையம் அமைக்கும் பணி கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 33 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட பணிகள் தற்போது முடிவடைந்ததை அடுத்து, தாம்பரம் மூன்றாவது முனையத்தில் இருந்து சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 2 வாராந்திர ரயில்கள் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஓரிரு வாரங்களில் தாம்பரம் முனையம் முழு செயல்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றை தாம்பரத்தில் இருந்து இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக எழும்பூரில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்களை பாதியாக குறைத்து தாம்பரத்தில் இருந்து இயக்க ஆய்வுகள் நடந்துவருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.