”நீரில் குளோரைடு கலந்ததே காரணம்” - 6 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு! 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல் குளத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகராஜ், பிரபு
நாகராஜ், பிரபு PT Desk

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார்( 39). இவரது மனைவி தாரிகா (35), இவர்களுக்கு சஸ்வின் வைபவ் (6), சித்விக் வைபவ் (2) என இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தாரிகா, தனது மூத்த மகன் சஸ்வின் வைபப் நீச்சல் பழகுவதற்காக, அதே பகுதியில் உள்ள நீச்சல் குளத்திற்கு தனது 2 மகன்களையும் அழைத்துச் சென்றுள்ளார்.

சஸ்வின் வைபப்
சஸ்வின் வைபப் PT Desk

அப்போது சஸ்வின் வைபவ் நீச்சல் பழகிக் கொண்டிருந்தபோது திடீரென நீச்சல் குளத்தில் மூழ்கி கூச்சலிட்டுள்ளார். இதனை கண்ட ஊழியர்கள், அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை மீட்டு செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சஸ்வின் வைபவ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் கோவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நீச்சல் குளத்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும், குளத்தில் இருந்த நீரில், குளோரைடு எனப்படும் திரவத்தை அதிக அளவில் கலந்த காரணத்தினால் மட்டுமே சிறுவன் உயிரிழந்திருக்க கூடும் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

Swimming Pool Sealed
Swimming Pool SealedPT desk

அதன் அடிப்படையில் இன்று நிகழ்வு இடத்திற்கு சென்ற குன்றத்தூர் தாசில்தார் நாராயணன் மற்றும் காவலர்கள் ஆய்வு நடத்தினர். இதில் தீயணைப்பு துறை, வருவாய் ஆய்வாளர் ஆகியவர்களிடம் மட்டுமே அனுமதி பெற்று இருப்பது தெரிய வந்தது. ஆனால் விதியின்படி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு, ,நீச்சல் குளத்தின் மின்சாரத்தை துண்டித்ததோடு, உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நீச்சல் குளம் உரிமையாளர்களான பிரபு, விஜயலட்சுமி, நாகராஜ் ஆகிய மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததோடு, நாகராஜ், பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து மணிமங்கலம் காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள நீச்சல் குளங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து உயிர் சேதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com