"எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்கிறோம்"- நீதிமன்றத்தில் காவல்துறை பதில் !

"எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்கிறோம்"- நீதிமன்றத்தில் காவல்துறை பதில் !
"எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்கிறோம்"- நீதிமன்றத்தில் காவல்துறை பதில் !

தேசியக் கொடி அவமதிப்பு விவகாரத்தில் எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.



அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா? என்றும் பேசி வீடியோ வெளியிட்டார். மேலும், மூன்று வர்ணங்கள் குறித்த புதுவிளக்கம் ஒன்றையும் எஸ்.வி.சேகர் கூறினார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவினர் பதிவு செய்த வழக்கில், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் காவல்துறையின் விளக்கத்தைப் பொறுத்து முடிவு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனிடையே தேசியக்கொடி அவமதிப்பு விவகாரத்தில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேசியக் கொடி அவமதிப்பு விவகாரத்தில் எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது. மேலும் எஸ்வி சேகரை கைது செய்வதற்கான தடையை செப்டம்பர் 14 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com