நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்.. ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
நெல்லையில் ஐடி ஊழியர் சாதி ஆணவக் கொலை வழக்கில், காவல் உதவி ஆய்வாளர் சரவணனை காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியர் கவின், நெல்லை கே.டி.சி நகரில் கடந்த 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். காதல் விவகாரத்தில் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரியின் தூண்டுதலால் இந்த கொலை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்யும் வரை, கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளரான சரவணனை காவல் துறையினர் கைது செய்தனர். நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சரவணனை, ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தனிச்சட்டம் இயற்றாமல் ஆணவக்கொலைகளுக்கு அரசே துணை போவதாக உடுமலை கௌசல்யா சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
கவினின் நீதிக்காக காதலியும் குரல் கொடுக்கனும் - கவுசல்யா
அவருடன் நமது செய்தியாளர் சுடலை மணி செல்வன் பேசிய போது பதிலளித்த கவுசல்யா, ”தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தனிச்சட்டம் இயற்றாமல் ஆணவக் கொலைக்கு அரசு துணை போகிறது. கவினின் நீதிக்காக அவரது காதலியும் குரல் கொடுத்தாக வேண்டும். அந்த பெண்ணுக்கு நானும் துணையாக இருப்பேன். பெண்கள் அம்பேத்கரையும் பெரியாரையும் உள்வாங்க வேண்டும்” என்றார்.
ஆயுதங்களுடன் சுர்ஜித் - வைரலாகும் புகைப்படங்கள்
அத்துடன், இந்தவழக்கில் கவினை கொலை செய்த சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சுர்ஜித் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் பரவி வருகின்றன. இதுபோன்ற புகைப்படங்கள் பரப்பப்படுவதை தடுக்க காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பரவலாக கேள்வி எழுந்துள்ளது.